நாமக்கல் மாவட்ட அளவிலான சிலம்பம் கலைத்திருவிழா : 300 வீரர்கள் பங்கேற்பு
மாவட்ட அளவிலான சிலம்பக் கலைத்திருவிழா மற்றும் மூத்த ஆசான்களுக்கு விருது விழங்கும் விழா நடைபெற்றது
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்ட அளவிலான சிலம்பக் கலைத் திருவிழாவில், 22 அணிகளை சேர்ந்த 300 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
நாமக்கல் மாவட்ட சிலம்பம் ஆசான்கள் மற்றும் பயிற்சியாளர்கள் சங்கம் சார்பில், உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட அளவிலான சிலம்பக் கலைத்திருவிழா மற்றும் மூத்த ஆசான்களுக்கு விருது விழங்கும் விழா, நாமக்கல் அடுத்த வேட்டாம்பாடியில் நடந்தது. மாவட்ட சிலம்ப ஆசான்கள் சங்க செயலாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். தலைவர் ராஜேந்திரகுமார் வரவேற்றார். தமிழரின் பாரம்பரிய சிலம்பக்கலையின், அனைத்துவிதமான குழு விளையாட்டுகள், அலங்கார சிலம்பம், போர் சிலம்பம், புலியாட்டம், தீ பந்தம், குத்து வரிசை போன்ற பல்வேறு சிலம்ப விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
இப்போட்டிகளில், மாவட்டம் முழுவதும் இருந்து, 22 அணிகளை சேர்ந்த, 300 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. சாம்பியன் பட்டம் வென்றவர்களுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டது. மேலும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக, 70 வயதுக்கும் மேற்பட்ட மூத்த சிலம்ப ஆசான்கள் 10 பேரை பாராட்டி விருது வழங்கப்பட்டது.