ஈமு பண்ணை மோசடி வழக்கு: தலைமறைவு நபர் குறித்து தகவல் அளிக்க போலீஸ் வேண்டுகோள்
ஈமு பண்ணை மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள நபர் குறித்து தகவல் அளிக்க போலீஸ் துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரேமலதா கூறியுள்ளதாவது:
கடந்த 2012 ம் ஆண்டு, நாமக்கல்-சேலம் ரோட்டில் எஸ்.ஆர்.ஒய் என்ற ஈமு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தை, ஜம்புகுமாருடன் இணைந்து சந்தோஷ் என்பவரும் நடத்தி வந்தனர்.
இந்த நிறுவனத்தினர் பொதுமக்களிடம் இருந்து பணத்தை முதலீடாகப் பெற்று மோசடி செய்து விட்டு இருவரும் தலைமறைவாகி விட்டனர்.
இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. கோவையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ் கோர்ட்டில் ஆஜராக வாய்தா போடப்பட்டது.
ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதனால் கோர்ட் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. சந்தோஷ் எங்கு உள்ளார், அவர் நண்பாகள், உறவினர்கள் வீடுகளுக்கு வருவது தெரிய வந்தால் உடனடியாக நாமக்கல் பொருளாதார குற்றப் பிரிவு அலுவலக தொலைபேசி 04286-281372 மூலம் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.