நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் திருப்பணி
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ரூ. 33 லட்சம் மதிப்பீட்டிலான திருப்பணியை எம்.பி துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS
நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் திருப்பணி வேலைகளை ராஜேஷ்குமார் எம்.பி துவக்கி வைத்தார்.
நாமக்கல் கோட்டையில் ஒரே கல்லினால் உருவான நாமக்கல் மலையில் எதிரில், வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் சுவாமி, சாந்த சொரூபியாக வணங்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நாள்தோறும், இந்தியா முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருகை தரும் திரளான பக்தர்கள் ஸ்ரீ ஆஞ்சநேயரை தரிசனம் செய்து செல்கின்றனர்.
வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அருளும் ஸ்ரீ ஆஞ்சாநேயருக்கு, தினசரி காலை 9 மணிக்கு 1008 வடைமாலை அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதணை நடைபெறும். தொடர்ந்து 10 மணிக்கு வடை மாலை கழற்றப்பட்டு, மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், திருமஞ்சள், 1008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிசேகம் நடைபெறும். இதனையடுத்து சுவாமிக்கு மலர் அங்கி, வெள்ளிக்கவசம், தங்கக்கவசம், முத்தங்கி போன்ற சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெறும். பின்னர் பக்தர்களுக்கும், கட்டளைதாரர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.
இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில், சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 1995ம் ஆண்டு, திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிசேகம் நடைபெற்றது. மீண்டும் கடந்த 2009ம் ஆண்டு இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிசேக விழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது ஆஞ்சநேயர் கோயிலில் திருப்பணிகள் நடத்துவதற்கு இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது. கோயில் முன்புறம் உள்ள விநாயகர் கோயில் புதுப்பிக்கப்பட்டு, ஆஞ்சநேயர் கோயில் முழுவதும் சிற்ப வேலைகள் மற்றும் வர்ணம் பூசப்பட்டு கோயில் திருப்பணிகள் நடைபெற உள்ளது. இதற்காக ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் செய்திட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதையொட்டி, திருப்பணிகள் துவக்க நிகழ்ச்சி ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில் வளாகத்தில், சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது. ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கோவில் திருப்பணிகளை துவக்கி வைத்தார். நாமக்கல் எம்.பி சின்ராஜ், எம்எல்ஏ ராமலிங்கம், நகராட்சித்தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி உள்ளிட்ட திரளானவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். கோயில் செயல் அலுவலரும், உதவி கமிஷனருமான இளையராஜா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
மேலும் நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த ஆன்லைன் வசதியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி தற்போது கியூஆர் (QR Code) மூலம் பக்தர்கள் காணிக்கை செலுத்தலாம். இந்த டிஜிட்டல் வசதி பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.