நாமக்கல்: ஒரே ஆண்டில் 55 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்..!
நாமக்கல் மாவட்டத்தில் ஒரு ஆண்டில் 55 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில், குழந்தை திருமணம் தொடர்பாக வந்த தகவல்கள் அடிப்படையில், நடைபெற இருந்த 55 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. மேலும், சட்டத்திற்கு புறம்பாக நடைபெற்ற 110 குழந்தை திருமணங்களில், சம்மந்தப்பட்டவர்களின் மீது குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டங்களின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் 2006ம் ஆண்டின் குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தின்படி, 18 வயது நிறைவடையாத பெண் குழந்தைக்கோ, 21 வயது நிறைவடையாத ஆணுக்கோ திருமணம் செய்வது குற்றமாகும். மீறுவோர் மீது சட்டப்படி 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். குழந்தை திருமணம் குறித்து, 181 மற்றும் 1098 என்ற இலவச டெலிபோன் நம்பர்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.