ஆதி திராவிடர், பழங்குயினர் மாணவர்களுக்கான ‘என் கல்லூரிக் கனவு’ வழிகாட்டி நிகழ்ச்சி
ஆதி திராவிடர், பழங்குயினர் மாணவர்களுக்கான ‘என் கல்லூரிக் கனவு’ வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.
HIGHLIGHTS
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பிளஸ் 2 முடித்த ஆதிதிராவிடர் மாணவ, மாணவியருக்கான என் கல்லூரிக்கனவு என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்த கலந்தாய்வு நிகழ்ச்சி, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் முருகன் தலைமை வகித்தார். தனி தாசில்தார் பிரகாஷ் வரவேற்றார். திட்ட ஆலோசகர் ராஜாஜெகஜீவன், திட்ட அலுவலர் பீட்டர் ஞானராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொன்போஸ்கோ அன்பு இல்ல இயக்குனர் கஸ்மீர்ராஜ், பயிற்சியாளர் மதி ஆகியோர் பல்வேறு வகையான படிப்புகள் குறித்து விளக்கிப் பேசினார்கள்.
கலந்தாய்வில், பிளஸ் 2 முடித்து அடுத்து என்ன படிக்கலாம், உங்கள் கனவுகளை நனவாக்கும் படிப்புகள் எவை, உயர்க்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித்தொகை வாய்ப்புகள், தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்விக்கான வழிகாட்டுதல்கள், சிறந்த வாய்ப்புகளுக்கு எந்த கல்லூரியில் என்ன படிக்கலாம். வருங்காலத்தை வளப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து மாணவ, மாணவியருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், பல்வேறு சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் இருந்தும் மற்றும் ஆதிதிராவிடர் விடுதி மாணவ, மாணவியர் உள்ளிட்ட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.