நாமக்கல்: கறுப்பு பூஞ்சை நோய் அறிகுறியுடன் 6 பேருக்கு சிகிச்சை
நாமக்கல் மாவட்டத்தில், கறுப்பு பூஞ்சை நோய் அறிகுறியுடன், 6 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
HIGHLIGHTS
தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின், இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. நாமக்கல் மாவட்டத்திலும், கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம், அதிகரித்துள்ளது. ஆனால், இதுவரை கறுப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கறுப்பு பூஞ்சை நோய் அறிகுறியுடன் 6 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி டீன் அலுவலர் டாக்டர் சாந்தா கூறியதாவது: தமிழகத்தில் பல இடங்களில் கறுப்பு பூஞ்சை நோய் பரவ துவங்கி உள்ளது. நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், அந்நோய்க்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு துவங்கப்பட்டுள்ளது.
அதில், தற்போது 6 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 2 பெண்கள் உள்பட, 3 பேருக்கு கறுப்பு பூஞ்சை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற, 3 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதற்கான முடிவு இன்னும் வரவில்லை.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களுக்கும் வாய்வழியாக வழங்கப்படும் மருந்து அளிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. மற்றொரு நபர், மேல்சிகிச்சைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.