பெற்றோரை இழந்த குழந்தைக்கு மாதாந்திர உதவித்தொகை: கலெக்டர் வழங்கல்
பெற்றோரை இழந்த குழந்தைக்கு 3 ஆண்டுகளுக்கு மாதாந்திர உவித்தொகை வழங்குவதற்கான உத்தரவை கலெக்டர் வழங்கினார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 230 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர். அவற்றை சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி, அவற்றின் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து, பரமத்தி வேலூர் தாலுக்கா, வடகரையாத்தூர் கிராமம், வீ.கரப்பாளையம் பகுதியை சேர்ந்த நித்யா என்பவர் கடந்த மார்ச் 11ம் தேதி, மர்மமான முறையில் இறந்ததையடுத்து, சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும், நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் பெற்றோர் இழந்த குழந்தைகளுக்கு, 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் மாதாதந்திர உதவித்தொகை ரூ.4,000 வழங்குவதற்கான உத்தரவை, அவரது மகள் தனுஷ்ரீயிடம் கலெக்டர் வழங்கினார்.
பின்னர் தரைத்தளத்தில், மாற்றுத்திறனாளிகளிடம் நேரில் சென்று குறைகளை கேட்டறிந்த கலெக்டர் உமா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 26 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.22,290 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கூட்டத்தில் டிஆர்ஓ மணிமேகலை, டிஆர்டிஏ திட்ட இயக்குநர் சிவக்குமார், திருச்செங்கோடு ஆர்டிஓ கவுசல்யா, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சுகந்தி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.