நிதி நிறுவனத்தில் பணம் மோசடி: ராசிபுரத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர் கைது
பைனான்ஸ் நிறுவனங்களில் பணம் பெற்று மோசடி செய்த பட்டதாரி இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம் குமார் (31) எம்.சி.ஏ பட்டதாரி. இவர் கடந்த, 15ம் தேதி, அதே பகுதியில் தனியார் பைனான்ஸ் ஒன்றில், தனக்கு சொந்தமான தங்க நகைகளை, சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள பேங்க் ஒன்றில் அடமானம் வைத்துள்ளதாகவும், அதனை மீட்டு, அவர்களது பைனான்சில் மறு அடகு வைப்பதாக கூறி, ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் பெற்றுள்ளார்.
ஆனால், அவர் சம்மந்தப்பட்ட வங்கியில் அடமானத்தில் இருந்த தங்க நகைகளை மீட்டு தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி, ராசிபுரம் பகுதியில் உள்ள நகைக் கடை ஒன்றில் இதே காரணத்தை கூறி ரூ.5 லட்சம், 19ம் தேதி சென்னையில் 2 தனியார் பைனான்ஸ் நிறுவனங்களில் ரூ.8 லட்சத்து 10 ஆயிரம் என மொத்தம் ரூ. 16 லட்சத்து 90 ஆயிரம் பெற்று பணத்தை மோசடி செய்துள்ளார்.
இதையடுத்து பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேம்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.