நாமக்கல் நகராட்சி வளர்ச்சிப்பணிகளை நிர்வாக இயக்குனர் பார்வையிட்டு ஆய்வு
தமிழ்நாடு நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் பொன்னையா நாமக்கல் நகருக்கு வருகை தந்து, பல்வேறு இடங்களில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
நாமக்கல் நகராட்சிக்கு வந்த மாநில நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் பொன்னையா, முதலைப்பட்டியில் புதிதாக அமைய உள்ள பஸ் நிலையப் பகுதி, ராமபுரம்புதூர் குட்டைத்தெரு, தற்போதைய பஸ் நிலையம், உழவர் சந்தை, திருவள்ளுவர் காலனி சந்திப்பு ஆகிய இடங்களில் கழிவுநீர் செல்லும் கால்வாய் மற்றும் ரோடு வசதி உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோட்டை நகராட்சிப் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், முல்லைநகரில் நடைபெற்று வரும் அறிவுசார் மையத்தின் கட்டுமானப்பணி, நகராட்சி மின்மயானம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், புதிதாக கட்டப்பட்டு வரும் தினசரி மார்க்கெட் கட்டுமானப் பணி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு அவர் ஆலோசனை வழங்கினார்.
நகராட்சி துப்புரவு பணியாளர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் கொசவம்பட்டி ஏரியில் மரக்கன்றுகளை நட்டார். பின்னர் நகராட்சி அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், எம்எல்ஏ ராமலிங்கம், நகராட்சி சேர்மன் கலாநிதி, வைஸ் சேர்மன் பூபதி, கமிஷனர் சுதா, இன்ஜினியர் சுகுமார் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.