வாய்த்தகராறில் கழுத்தை நெறித்து கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை
இரண்டு பெண்களுக்குள் ஏற்பட்ட வாய்த்தகராறில், கழுத்தை நெறித்துக்கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்த ஆவாரங்காடு பெரியார் நகரை சேர்ந்தவர் வேலு (32). அவரது அக்காவுக்கு திருமணமாகி, பள்ளிபாளையம் டிவிஎஸ் மேட்டில் வசித்து வருகிறார். கடந்த 2017ம் ஆண்டு செப். 14ம் தேதி மாலை 4.30 மணிக்கு, வேலுவும் அவரது தாயார் புஷ்பாவும் வீட்டில் இருந்தனர். அப்போது, வேலுவின் அக்கா மகன் கோபால் அழுது கொண்டு வந்தார். விசாரித்தபோது, தனது நண்பர் சுமனின் பாட்டி சின்னபொண்ணு (45) என்பவர் தன்னை அடித்துவிட்டதாக கூறினார்.
இது குறித்து, சின்னபொண்ணுவிடம் சென்று புஷ்பா கேட்டபோது, என் பேரனை விளையாட்டில் சேர்த்துக் கொள்ளாததால் கோபாலை அடித்தேன் எனக்கூறினார். அதனால், அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சின்னபொண்ணு, புஷ்பாவின் கழுத்தைப் பிடித்து நெறித்துள்ளார். அப்போது காயமடைந்த புஷ்பாவை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி புஷ்பா பரிதாபமாக உயிரிழந்தார்.
பள்ளிபாளையம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, சின்னப்பொண்ணுவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, நாமக்கல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் குற்றம் சாட்டப்பட்ட சின்னபொண்ணுக்கு ஆயுள் தண்டையும், ரூ.5,500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.