நெடுஞ்சாலை சுங்க கட்டண உயர்வை திரும்பப்பெற கொங்கு ஈஸ்வரன் வேண்டுகோள்
நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்று கொமதேக ஈஸ்வரன் எம்எல்ஏ மத்திய அரசுக்குவேண்டுகோள் விடுத்துள்ளார்.
HIGHLIGHTS
நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்று கொமதேக ஈஸ்வரன் எம்எல்ஏ மத்திய அரசுக்குவேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு எம்எல்ஏவுமான இ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பெரும்பாலான தேசிய நெடுஞ்சாலைகளில் போதிய சாலை பாரமரிப்பு இல்லாத நிலையிலும், சுங்கக் கட்டணம் வசூல் செய்வதற்கான ஒப்பந்த கால அவகாசம் முடிந்த நிலையிலும் பல இடங்களில் வருமானம் மட்டுமே இலக்காக கொண்டு சுங்க கட்டண வசூல் வேட்டையில் ஈடுபடுகின்றனர். இது, ஏற்கனவே விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளையும், தொழில்துறையும், போக்குவரத்து தொழில் செய்பவர்களையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் மிகவும் பாதிக்கும். இதற்கு பின்னர் விலைவாசி மேலும் கடுமையாக உயரும் அபாயமும் உள்ளது. அரசு போக்குவரத்து கழகமும் தன் சுமையை குறைக்க பேருந்து கட்டணத்தை உயர்த்தவும் வாய்ப்பு உள்ளது. பல்வேறு இடங்களில் சாலை பராமரிப்பு பணிகளும், சாலை விரிவாக்க பணிகளும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படாமலும் அடிக்கடி விபத்துகளையும் உயிரிழப்புகளையும் சந்தித்து வரும் இந்த வேலையில், மத்திய அரசும், நெடுஞ்சாலை ஒப்பந்ததார்களும், வருமானத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு சுங்கக் கட்டண வேட்டை நடத்துவது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது.
ஒப்பந்த காலம் முடிந்தும் சுங்கக் கட்டணம் வசூல் செய்யும் சுங்கசாவடிகளில், முற்றிலும் சுங்க வசூலை நிறுத்திட வேண்டும். சுங்க சாவடிகளில் வசூல் செய்யப்படும் மொத்த சுங்க வசூல் பற்றிய வெளிப்படை தன்மை இல்லாமல், ஆண்டுக்கு ஆண்டு தொழிற்துறையினர் மற்றும் போக்குவரத்து தொழில் ஈடுபவர்களிடம் கலந்தாலோசனை செய்யாமல் அவர்களுக்கு உள்ள பிரச்சனைகளை பற்றி கேட்டறியாமல், பொதுமக்களின் பாதிப்பை பற்றி கவலைப்படாமல் உயர்த்தப்பட்டுள்ள, சுங்கச்சாவடி கட்டண உயர்வை, மத்திய அரசும் அதன்கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் உடனே திரும்ப பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.