குறைப்பிரசவ குழந்தையை காப்பாற்றி அரசு டாக்டர்கள் சாதனை: கலெக்டர் பாராட்டு
குறைப்பிரசவ குழந்தையை காப்பாற்றிய அரசு மருத்துவமனை டாக்டர்களுக்கு நாமக்கல் கலெக்டர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
நாமக்கல் கணேசபுரத்தைச் சேர்ந்த திருமதி சாதனா (31), விக்னேஷ் தம்பதியினருக்கு கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி சேலத்தில் உள்ள, தனியார் ஆஸ்பத்திரியல் ஆபரேசன் மூலம் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. குறைப்பிரசவத்தில் மிகவும் எடை குறைவாகப் பிறந்த குழந்தைகளை அதே ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஒரு மாதம் சிகிச்சை அளித்தும் குழந்தைகளில் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. சிகிச்சைக்காக, ரூ. பல லட்சம் செலவனதால் பெற்றோர்கள் கவலையடைந்தனர். எனவே குழந்தைகளை நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கொண்டு வந்து சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஓரிரு நாட்களில், இரட்டைக் குழந்தைகளில் முதல் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்து விட்டது. அந்தக் குழந்தையின் எடை 720 கிராம் மட்டுமே இருந்தது. இதனால் பெற்றோர்கள் மட்டுமின்றி டாக்டர்களும் மனவேதனை அடைந்தனர். உயிருடன் இருந்த 525 கிராம் மட்டுமே எடை இருந்த, மற்றொரு குழந்தையை காப்பாற்றியே தீர வேண்டும் என்ற சவாலுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தனர்.
மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சாந்தா அருள்மொழி மற்றும் துணைத்தலைவர்களின் ஆலோசனையுடன் தொடர்ந்து 80 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பலனாக குழந்தையின் உடல்நிலை சீரடைந்து, 525 கிராம் எடையுடன் இருந்த அந்த குழந்தை தற்போது 1.3 கிலோ அளவிற்கு எடை உயர்ந்து ஆரோக்கியத்துடன் உள்ளது. இதனால் பெற்றோர்களும், டாக்டர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டர்களால் காப்பாற்றப்பட்ட குழந்தையை பார்வையிட்டார். பின்னர் அக்குழந்தையைக் காப்பாற்ற பாடுபட்ட டாக்டர்கள் மற்றும் நர்சுகளை பாராட்டினார்.
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர், மருத்துவர் சாந்தா அருள்மொழி கூறியதாவது: மாநிலத்திலேயே பச்சிளம் குழந்தைகள் பிரிவில் சிறப்பாக செயல்படும் அரசு ஆஸ்பத்திரிகளில், நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு தனி இடம் உண்டு. அந்த வகையில் 525 கிராம் மட்டுமே பிறப்பு எடைகொண்ட குழந்தையைக் காப்பாற்றுவது நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி வரலாற்றில் இதுவே முதல் முறை. இதன் மூலம் ஒரு புதிய மைல் கல்லை நமது டாக்டர்கள் அடைந்துள்ளனர்.
தனியார் மருத்துவமனைகளில் பல லட்சம் செலவு செய்யக் கூடிய சிகிச்சைகள் அனைத்தும் இங்கு முற்றிலும் இலவசமாகவே செய்யப்படுகிறது. இதற்காக அரசு மிக விலை உயர்ந்த நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் இந்த மருத்துவ சேவையை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.