மக்கள் குறைதீர் முகாமில் இலவச வீட்டு மனைப் பட்டா: கலெக்டர் வழங்கல்
நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் இலவச வீட்டுமனைப் ப ட்டாக்களை கலெக்டர் வழங்கினார்.
HIGHLIGHTS
நாமக்கல்லில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, ரோடு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 274 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள். அந்த மனுக்களை உரிய அலுவலர்களிடம் வழங்கி, அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டார்.
மோகனூர் தாலுக்கா, அருர் பஞ்சசாயத்தில், காந்தி ஜெயந்தி அன்று நடைபெற்ற, சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பட்டா வேண்டி மனு வழங்கிய லதா என்ற பெண்ணிற்கு இலவச வீட்டு மனைப் பட்டாவினை கலெக்டர் வழங்கினார். மேலும், கோவிட் தொற்றால் ஒரு பெற்றோரை இழந்த தனியார் பள்ளி, கல்லூரியில் படிக்கும் 4 மாணவ, மாணவிகளுக்கு தனியார் அறக்கட்டளையின் சார்பில், ரூ. 1.24 லட்சம் கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார். பின்னர் காசநோய் கண்டறியும் பணிக்கு நிதி சேர்க்கும் வகையில் அதிக அளவில் ஸ்டாம்ப்புகளை விற்பனை செய்த அரசு அதிகாரிகளக்கு கேடயங்களை கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்.
தேசிய ஒற்றுமைநள் உறுதிமொழி:
முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில், சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளையொட்டி, தேசிய ஒற்றுமை நாள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில், பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டு, இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும், இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும், சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்குப் பார்வையாலும், நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினைப் பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன். எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உறுதிமொழியை ஏற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்புத்திட்ட சப் கலெக்டர் தேவிகாராணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.