காவலர் தேர்வுக்கு நாமக்கல்லில் இலவச பயிற்சி வகுப்பு : ஆட்சியர் தகவல்
காவலர் தேர்வுக்கு நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மையம் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
HIGHLIGHTS
நாமக்கல்லில் காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது. தற்பொழுது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் TNUSRB – PC , 3,359 பணிக்காலியிடங்கள் கொண்ட இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கு எழுத்து தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வருகிற செப். 17ம் தேதி வரை இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற சீருடைப்பணியாளர் வாரிய தேர்வில், இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), போட்டித் தேர்வில், நாமக்கல் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் நடைபெற்ற இலவச எழுத்து மற்றும் உடற்தகுதி பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு, 2021 ஆம் ஆண்டில் 24 பேரும், 2022 ஆம் ஆண்டில் 17 பேரும் தேர்வு செய்யப்பட்டு தற்போது பணியில் உள்ளனர்.
சீருடை பணியாளர் தேர்வு வாரிய எழுத்துத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின்படி, நேரடியாக நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடத்தப்படவுள்ளது.
இத்தேர்வுக்கான இலவச நேரடி பயிற்சி வகுப்பு ஆக. 30ம் தேதி முதல், தினசரி மதியம் 2.30 முதல் 5,00 மணி வரை நடத்தப்படுகிறது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துக் கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களின் விவரத்தினை 04286-222260 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது onlineclassnkl@gmail.com என்ற இ-மெயில் மூலமாகவோ, அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு நேரில் தொடர்பு கொண்டு தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுயவிவரத்தினை பதிவு செய்து பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.