முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மீண்டும் ரெய்டு
முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மீண்டும் ரெய்டு நடத்தினார்கள்.
HIGHLIGHTS
நாமக்கல்லில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கருக்கு சொந்தமான வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இரண்டாவது முறையாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
நாமக்கல் நகர அ.தி.மு.க. செயலாளர் பாஸ்கர். இவர் ஏற்கனவே இரண்டு முறை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக பணியாற்றியுள்ளார். கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில் எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிட்ட அவர் தோல்வியை தழுவினார். முன்னாள் எம்.எல்.ஏ பாஸ்கர் மற்றும் அவரது மனைவி உமா ஆகியோர் கடந்த 2011-15, 2016-2021 வரை, பாஸ்கர் தொடர்ந்து 10 ஆண்டுகளாக எம்.எல்.ஏ வாக இருந்த போது தனது வருமானத்திற்கு அதிகமாக ரூ. 4.72 கோடி அளவிற்கு சொத்து சேர்த்ததாக, நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, அவருக்கு சொந்தமான, நாமக்கல்லில் 28 இடங்களிலும் மதுரை மற்றும் திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் தலா ஒரு இடத்திலும் என மொத்தம் 30 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். சோதனையின்போது பல ஆவனங்களை போலீசார் கைப்பற்றிச் சென்றனர்.
இந்த சோதனையில் பணம் ரூ.26,52,660 மற்றும் ரூ.1,20,000 மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள், 4 சொகுசு கார்கள், பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், கடன் பத்திரங்கள், வங்கி கணக்குகள், 1.680 கிலோ எடையுள்ள தங்க நகைகள், 6.625 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்கள், ரூ. 20 லட்சம் மதிப்புள்ள கிரிப்டோ கரன்சி முதலீடுகள், முக்கிய கம்ப்யூட்டர் பதிவுகள் ஆகியவை கண்டறியப்பட்டு, வழக்கிற்கு தொடர்புடைய பணம் ரூ.14,96,900/- மற்றும் வழக்கு தொடர்புடைய 214 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று 18ம் தேதி காலை நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீரென நாமக்கல் முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர் வீட்டிற்கு வந்தனர். அவர்களுடன் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் வந்தனர். நான்கு மாதங்களுக்கு முன்பு முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை மேற்கொண்டபோது, கைப்பற்றிய சொத்து ஆவணங்களை எடுத்துச் சென்று, அது குறித்து விசாரணை விசாரணை மேற்கொண்டனர். இன்று பாஸ்கரின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட அவரது சொத்து மதிப்பீடுகளை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மற்றும் அதிகாரிகள் அளவீடு செய்து, சொத்து மதிப்பு மற்றும் அவர் ஆவணங்களில் தெரிவித்துள்ள சொத்து மதிப்பு ஆகியவற்றை சரி பார்த்து வருகின்றனர்.