திருச்செங்கோட்டில் டெபாசிட் பெற்று ரூ. 40 கோடி மோசடி: பைனான்ஸ் அதிபர் கைது..!
திருச்செங்கோட்டில் டெபாசிட் பெற்று ரூ. 40 கோடி மோசடி செய்த பைனான்ஸ் அதிபர் கைது செய்யப்பட்டார்.
HIGHLIGHTS
நாமக்கல்:
திருச்செங்கோட்டில் பைனான்ஸ் நடத்தி, ரூ. 40 கோடி மோசடி செய்த பைனான்ஸ் அதிபரை பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
திருச்செங்கோட்டை சேர்ந்த சோமசுந்தரம், செல்லம்மை, அருணாச்சலம் (எ) ராமு, சுவர்ணமாலா, காந்திமதி, வள்ளியம்மை ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் கூட்டாக சேர்ந்து, திருச்செங்கோடு கச்சேரி தெருவில், பல ஆண்டுகளாக பைனான்ஸ் வைத்து நடத்தி வந்தனர்.
இவர்களது பைனான்ஸ் நிறுவனத்தில் அதிக வட்டி தருவதாகக் கூறி, பல பொதுமக்களை ஏமாற்றி முதலீடு பெற்றுள்ளனர். இது சம்மந்தமாக, நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்ற பிரிவு போலீசில், இதுவரை 91 புகார் மனுக்கள் பெறப்பட்டதில் மொத்தம் ரூ. 40 கோடியே 93 லட்சத்து 86 ஆயிரத்து 960 மதிப்பில் பொதுமக்கள் முதலீடு செய்து ஏமாந்துள்ளனர் என்பது தெரியவருகிறது.
இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட சோமசுமத்தரம் உள்ளிட்டவர்கள் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்ய சென்னை, பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் டிஜிபி பாலநாகதேவி மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் ஐஜி சத்யப்பிரியா ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
இதையொட்டி அவர்களை நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில், இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான சோமசுந்தரம் செட்டியார் (80), என்பவரை நாமக்கல் -சேலம் மெயின் ரோட்டில் சென்றபோது கைது செய்தனர். அவரிடம் இருந்து வழக்கு சொத்து சம்மந்தமான ஆவணங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் சோமசுந்தரம் செட்டியார், கோவை, முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு கோர்ட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.