அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உபகரனங்கள் வாங்க ரூ.41 லட்சம் நிதி உதவி
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி உபகரனங்கள் வாங்கிட எம்.பி ராஜேஷ்குமார் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 41 லட்சம் வழங்கினார்.
HIGHLIGHTS
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி உபகரனங்கள் வாங்கிட ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 41 லட்சம் வழங்கினார்.
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில், மாணவர் மன்றம் துவக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார், நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, அரசு மருத்துவக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் பயன்பாட்டிற்காக, ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமாரின், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.41.03 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கான நிதி உதவியை கல்லூரி முதல்வரிடம் வழங்கினார்.
பின்னர் அமைச்சர் மதிவேந்தன் கல்லூரி மாணவர் மன்றத்தினை துவக்கி வைத்தும், கல்லூரி மாணவர்களுக்கு உதவிட விருட்சம் என்ற அமைப்பினை தொடங்கி வைத்தும் பேசியதாவது:
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் மன்றத்தினையும், மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவச்செல்வங்களுக்கு தேவையான நிதியுதவியை வழங்கிட விருட்சம் என்ற அமைப்பினையும் தொடங்கி வைப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இந்த கல்லூரியில் பயின்ற முதலாம் ஆண்டு மாணவர்கள் அனைவரும் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளமைக்கு, வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பயன்பாட்டிற்காக, ரூ.41.03 லட்சம் மதிப்பீட்டில் பயிற்சி மருத்துவ உபகரணங்கள் வாங்கிட, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி உதவி வழங்கியுள்ளேன். அது மட்டுமல்லாது புற்றுநோய் சிகிச்சைக்காகவும், கொரோனா கால சிகிச்சைக்காகவும் பல்வேறு வகைகளில் பொதுமக்களுக்கு உதவி செய்து வருகிகிறோம். இன்று தொடங்கப்பட்டுள்ள விருட்சம் எனும் அமைப்பிற்கு அவர் தனது ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். அதேபோன்று நானும், நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கமும் எங்களது ஒரு மாத சம்பளத்தை இந்த அமைப்பிற்கு நன்கொடையாக வழங்க உள்ளோம். மாணவச் செல்வங்கள் அனைவரும் இந்த கல்லூரி காலத்தினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு, நன்றாக கல்வி பயின்று எதிர்காலத்தில் நல்ல டாக்டராகி, மருத்துவ சேவை புரிந்து, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு நற்பெயரை பெற்றுத் தர வேண்டும் என பேசினார்.
நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, துணை முதல்வர் வெங்கடசுப்பிரமணியன், அரசு வக்கீல் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.