காலிங்கராயன் அத்திக்கடவு - அவிநாசி திட்டம்: முதல்வருக்கு கொங்கு ஈஸ்வரன் நன்றி
காலிங்கராயன் அத்திக்டவு - அவிநாசி திட்டம் பெயர் சூட்ட நடவடிக்கை எடுத்துள்ள, தமிழக முதல்வருக்கு கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ நன்றி தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளரும், திருச்செங்கோடு எம்எல்ஏவுமான, இ.ஆர். ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
அவிநாசி - அத்திக்கடவு திட்டம், கொங்குநாடு பகுதி மக்களின் நீண்ட கால கனவாக இருந்து வந்தது. இந்த திட்டத்தை நிறைவேற்றக்கோரி, ஏற்கனவே எனது தலைமையில் 186 கி.மீ. நடை பயணம் நடத்தப்பட்டது. கொங்கு பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று துவக்கப்பட்ட, அவிநாசி - அத்திக்கடவு திட்டம் தற்போதைய திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டம் காலிங்கராயன் அணைப்பகுதியில் தண்ணீர் எடுக்கப்பட்டு, அவிநாசி வழியாக அன்னூர் வரை பாசன நீர் கொண்டு செல்லப்படுகிறது. 700 ஆண்டுகளுக்கு முன்பு காலிங்கராயன் அணையை, காலிங்கராயன் கட்டி, காலிங்கராயன் பாசன வாய்க்காலை நிர்மாணித்து, பவானி நதியையும், நொய்யல் நதியையும் இணைத்து, அப்போதே நதிகள் இணைப்பு செய்துள்ளார்.
தற்போது அந்த அணைக்கட்டில் இருந்து தண்ணீர் எடுப்பதால், அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தில் காலிங்கராயன் பெயரை சேர்ப்பது, பொருத்தமானது மட்டுமல்ல , அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகும். இது காலிங்கராயனுக்கு புகழ் சேர்ப்பதாக அமையும்.
எனவே இந்த திட்டத்திற்கு காலிங்கராயன் அத்திக்கடவு -அவிநாசி திட்டம் என்று பெயர் சூட்ட வேண்டும் என்று கடந்த ஏப். 10ம் தேதி தமிழக சட்டசபையில் பேசி வேண்டுகோள் விடுத்தேன். மேலும் இது குறித்து கடந்த ஆக. 16ம் தேதி தமிழக முதல்வரிடமும், நீர்வளத்துறை அமைச்சரிடமும் கோரிக்கை மனு அளித்தேன்.
தற்போது, தமிழக முதல்வர் மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் உத்தரவின் பேரில், இந்த திட்டத்திற்கு, காலிங்கராயன் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் என்று பெயர் சூட்டுவதற்காக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு, மாநில நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் முத்தையா, கோவை மண்டல தலைமைப் பொறியாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
காலிங்கராயன் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் பெயர் சூட்ட நடவடிக்கை எடுத்துள்ள தமிழக முதல்வர் மற்றும் நீர்பாசனத் துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்ளவதாக அந்த அறிக்கையில் ஈஸ்வரன் கூறியுள்ளார்.