நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட காங்கிரஸார் நடை பயணம்
காங்கிரஸ் தலைவர், ராகுல்காந்தி எம்.பி.யின், இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, நாமக்கல்லில் காங்கிரசார் நடைபயணம் மேற்கொண்டனர்.
HIGHLIGHTS
ராகுல்காந்தி எம்.பி. கடந்த ஆண்டு ஒற்றுமை நடை பயணத்தை துவக்கினார். இதன் ஓராண்டு நிறைவை கொண்டாடும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொள்ள காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வேண்டுகோள் விடுத்து உள்ளார். இதையொட்டி, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டனர்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், நாமக்கல் உழவர்சந்தை அருகே, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, தொடங்கிய நடைபயணத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக் தலைமை வகித்தார்.
பூங்கா சாலை வழியாக பஸ்நிலையம் அருகே உள்ள நேரு பூங்காவில் நடைபயணம் நிறைவு பெற்றது. பின்னர் காங்கிரஸ் நிர்வாகிகள் காமராஜர் மற்றும் நேரு சிலைக்கு மாலை அணிவித்து நடைபயணத்தை முடித்து கொண்டனர். நகர காங்கிரஸ் தலைவர் மோகன், காங்கிரஸ் நிர்வாகிகள் சீனிவாசன், வரதராஜன், லோகநாதன், பொன்முடி உள்ளிட்ட திரளான காங்கிரசார் நடை பயணத்தில் கலந்துகொண்டனர்.