4 மையங்களில் வட்டார கல்வி அலுவலர் தேர்வு: 1,421 பேர் தேர்வர்கள் பங்கேற்பு
நாமக்கல் மாவட்டத்தில் வரும் செப்.10ம் தேதி நடைபெறும், வட்டார கல்வி அலுவலர் தேர்வில் 1,421 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில் வரும் செப்.10ம் தேதி நடைபெறும், வட்டார கல்வி அலுவலர் தேர்வில் 1,421 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் வட்டாரக் கல்வி அலுவலர் தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் செப்.10-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் வட்டாரக் கல்வி அலுவலர் தேர்வு, நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காவேட்டிப்பட்டி குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய 4 மையங்களில் நடைபெற உள்ளது. இம்மையங்களில் மொத்தம் 1,421 தேர்வர்கள் தேர்வெழுத தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் நாளான்று தேர்வர்கள் மையத்திற்கு காலை 8.30 முதல் 9.30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். காலை 9.30 மணிக்கு பிறகு தேர்வு மையத்திற்கு வருவோர் அனுமதிக்கப்படமாட்டார்கள். எனவே தேர்வர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் மையத்திற்கு வரவேண்டும். தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
தேர்வு மைய வளாகத்திற்குள் தேர்வர்கள் உடன் வருபவர்கள் எவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேற்கண்ட தேர்வு மையங்களுக்கு செல்ல அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றார்.
முன்னதாக தேர்வினை சிறப்பான முறையில் நடத்த அனைத்து துறை அலுவலர்களும் தங்களுக்கான பணிகளை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியர் உமா அறிவுறுத்தினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்டக் கல்வி அலுவலர்கள் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.