மோகனூர் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் குண்டம் இறங்கிய பக்தர்கள்
மோகனூர் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.
HIGHLIGHTS
மோகனூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள், குண்டம் இறங்கி, அம்மனுக்கு தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.
நாமக்கல் மாவட்டம் மோகனூரில், பிரசித்தி பெற்ற அருள்மிகு மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில், ஆண்டுதோறும், சித்திரை திருவிழா, வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு சித்திரை விழா, கடந்த 1ம் தேதி, காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, காவிரி ஆற்றுக்கு சென்ற பக்தர்கள் புனித நீராடி, தீர்த்தக்குடம் எடுத்து வந்து, கோவில் முன் நடப்பட்டுள்ள கம்பத்திற்கு ஊற்றி வழிபாடு செய்தனர். தினமும், மாலை 5 மணிக்கு, சுவாமிக்கு அபி?ஷகம், ஆராதனை நடைபெற்று, சுவாமி வெள்ளிக் கவசத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
13ம் தேதி, இரவு 9 மணிக்கு, வடிசோறு வைத்து சுவாமிக்கு படையல் வைத்து பூஜை செய்யப்பட்டது. இன்று, அதிகாலை 5 மணிக்கு, கோயில் முன்புறம் பூக்குழி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, மாலை, 3 மணிக்கு, காவிரி ஆற்றுக்கு சென்ற திரளான ஆண், பெண் பக்தர்கள், புனித நீராடி, ஊர்வலமாக வந்து, கோயில் முன் அமைக்கப்பட்டுள்ள குண்டத்தில் இறங்கி, அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர்.
நாளை (ஏப். 16) காலை 6 மணிக்கு கிடா வெட்டுதல் நடைபெறும். 9 மணிக்கு அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும், சுவாமிக்கு, பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். இரவு 7 மணிக்கு, மாவிளக்கு பூஜையும், இரவு 10 மணிக்கு, கம்பம் பிடுங்கி, ஆற்றில் விடும் நிகழ்ச்சியும் நடைபெறும். 17ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.