பால் கொள்முதல் விலையை ஒரு லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
பால்கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 10 உயர்த்தி வழங்கக் கோரி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
நாமக்கல் ஆவின் நிர்வாக அலுவலகம் முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். பூபதி, பெருமாள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில தலைவர் முனுசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் பால் கொள்முதல் விலையை ஒரு லிட்டருக்கு ரூ. 10 வீதம் உயர்த்தி பசும்பாலுக்கு ரூ. 42 எனவும், எருமைப் பாலுக்கு ரூ. 51 எனவும் அறிவிக்க வேண்டும். ஆவின் பாலை ஒரு லிட்டருக்கு ரூ. 3 வீதம் விற்பனை விலையைக் குறைத்ததால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய மாநில அரசுரூ. 300 கோடியை ஆவின் ஒன்றியங்களுக்கு வழங்கிடவேண்டும்.
பால் கொள்முதலை தினம் தற்போது 32 லட்சத்திலிருந்து 1 கோடி லிட்டராக உயர்த்திட வேண்டும். பாலுக்கான பாக்கி முழுவதையும் உடனடியாக வழங்கிட வேண்டும். குழந்தைகள் சத்துணவுத்திட்டத்தில் பால் பவுடர் சேர்த்து வழங்கிட வேண்டும். ஆவினில் கால்நடைகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் மருந்துகள் வழங்கிட வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் முடிவில் ராஜா நன்றி கூறினார்.