மோகனூர் ஊராட்சி ஒன்றிய வளர்ச்சிப் பணிகளை கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு
மோகனூர் ஊராட்சி ஒன்றிய வளர்ச்சிப் பணிகளை கலெக்டர் ஸ்ரேயா சிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஊராட்சி ஒன்றியம், பாலப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது புற நோயாளிகள் தினசரி வருகை குறித்த பதிவேடு, உள் நோயாளிகள் விவர பதிவேடு, பணியாளர்களின் வருகை பதிவேடு, ஆய்வக பதிவேடு உள்ளிட்ட பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கர்ப்பிணித்தாய்மார்கள் மருத்துவ ஆலோசனைக்கான வருகை பதிவேட்டினை பார்வையிட்டு, இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்ற தாய்மார்களின் விவரங்களை ஆய்வு செய்தார். கர்ப்பிணித்தாய்மார்கள் மருத்துவ ஆலோசனைகளுக்காக குறிப்பிட்ட இடைவெளியில் வருகைபுரிந்துள்ளனரா, அவர்களை நர்சுகள் சரியான முறையில் அழைத்து வந்துள்ளார்களா என்பன குறித்த விவரங்களை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், மணப்பள்ளி பஞ்சாயத்து, அங்கன்வாடி மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து கலெக்டர் அங்கிருந்த குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடினார். கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இணை உணவு வழங்கப்படும் விவரம் குறித்தும் கேட்டறிந்து, உணவு பொருட்களின் இருப்பு குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மணப்பள்ளி ரேசன் கடையில் ஆய்வு செய்த கலெக்டர் பொருட்களின் இருப்பு, விற்பனை போக மீதமுள்ள இருப்பினை சரிபார்த்து, விற்பனையான பொருட்களின் தொகை விபரங்களை விற்பனை இயந்திரத்தில் பார்வையிட்டு சரிபார்த்தார். மேலும் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில், மணப்பள்ளி பஞ்சாயத்து அலுவலக புதிய கட்டிடம் கட்டும் பணியினை கலெக்டர் பார்வையிட்டார்.