அரசு திட்டங்கள் பயனாளிகளை சென்றடைய பணியாற்றுங்கள்: அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
அரசு திட்டங்கள் அனைத்து பயனாளிகளையும் சென்றடையும் வகையில், அதிகாரிகள் ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும் என்று, நாமக்கல் கலெக்டர் அறிவுறுத்தினார்.
HIGHLIGHTS
அனைத்து துறை அரசு அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை வகித்தார். இதில், ஊரக வளர்ச்சி முகமை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், மகளிர் திட்டம், வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, பட்டு வளர்ச்சித்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, தாட்கோ, கால்நடை பராமாணீப்புத்துறை, மாவட்ட தொழில் மையம், மாவட்ட முன்னோடி வங்கி, தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் ஆகிய துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், மேற்கொள்ளப்படும் பணிகள், பயன்பெறும் பயனாளிகள் குறித்தும் துறை வாரியாக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.
அனைத்து துறை அலுவலர்களும் தங்கள் துறைகளின் கீழ் ஒரே மாதிரியான திட்டங்கள் இருந்தால் அதற்கான பயனாளிகளை துறைகள் இணைந்து கண்டறிந்து பயன்பெற செய்யவேண்டும். ஒரு திட்டத்தின் கீழ் பயனாளிக்கு உதவிகள் வழங்கும் போது பயனாளியின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாமல் இருந்தால் பயனாளியின் மீதமுள்ள தேவையை எந்த துறையின் மூலம் வழங்க முடியும் என்பதை தெரிந்து பயனாளிகளுக்கு உதவ வேண்டும்.
அனைத்து அரசுத்துறையினரும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அரசு திட்டங்களின் மூலம் முழுமையாக பயன்பெறும் வகையில் தங்களது பணியினை ஈடுபாட்டோடு மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் டிஆர்டிஏ திட்ட இயக்குநர் மலர்விழி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பாலமுருகன், வேளாண்மை இணை இயக்குநர் அசோகன், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் பொன்னுவேல், பிஆர்ஓ சீனிவாசன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.