நாமக்கல்லில் தானியங்கி மஞ்சப்பை வழங்கும் இயந்திரம் துவக்கம்
நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில், தானியங்கி மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தை ஆட்சியர் உமா துவக்கி வைத்தார்
HIGHLIGHTS
சுற்றுச்சூழல் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே துவக்கி வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக, தமிழகம் எங்கும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்நடைபெற்று வருகிறது. இதன் ஒரு அங்கமாக, நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயிலில் தானியங்கி மஞ்சப்பை வழங்கும் இயந்திரம் (மஞ்சப்பை வெண்டிங் மெசின்) அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ரூ. 10 செலுத்தி மஞ்சப்பையை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளலாம். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய நாமக்கல் மற்றும் குமாரபாளையம் சுற்றுச்சூழல் பொறியாளர்கள் முன்னிலையில், இந்த இயந்திரம் துவக்க விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் உமா நிகழ்சியில் கலந்துகொண்டு, புதிய மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு மஞ்சப்பையுடன், இலவச மரக்கன்றுகளை வழங்கினார்.
அப்போது, மஞ்சப்பையின் முக்கியத்துவம் குறித்து பொது மக்களுக்கு அவர் எடுத்துக் கூறினார். மேலும், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பனை, மூங்கில், வாழை மட்டை மற்றும் இதர விவசாய பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மாற்றுப் பொருட்கள் கண்காட்சியை திரளான பொதுமக்கள் பார்வையிட்டனர். பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.