'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை: கலெக்டர் வேண்டுகோள்
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கிழ் பெறப்பட்டுள்ள மனுக்கள் மீது அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாமக்கல் கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
HIGHLIGHTS
தேர்தல் பிரச்சாரத்தின்போது, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு, 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று, அப்போது மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். திமுக ஆட்சி அமைந்ததும், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. அதன் சிறப்பு அலுவலரிடம் அனைத்து மனுக்களும் ஒப்படைக்கப்பட்டு, பெறப்பட்ட அனைத்து மனுக்களும் மாவட்ட வாரியாக, பிரிக்கப்பட்டு இண்டர்நெட்டில் அப்லோட் செய்யப்பட்டுள்ளது.
மனுக்களுக்கு உடனடி தீர்வு காண மாவட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவ்வகையில், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காண்பது தொடர்பான அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இதில், கலெக்டர் ஸ்ரேயாசிங் கூறியதாவது: உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் நேரடி கள ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுக்களை அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு கருணையுடன் பரிசீலித்து, நடவடிக்கை எடுத்து மனுதாரர்களுக்கு பதிலளிக்க வேண்டும்.
மனுதாரர்களின் கோரிக்கை குறிப்பிட்ட திட்டத்தின் மூலம் தீர்வு காண முடியாத நிலையில் வேறு திட்டங்களின் மூலம் அவர்கள் பயன்பெற வாய்ப்புகள் இருந்தால் மனுதாரர்கள் அத்திட்டங்களின் மூலம் பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுக்களுக்கு விரைவாகவும், முறையாகவும் தீர்வு கண்டு, மாவட்ட நிர்வாகத்திற்கு நற்பெயர் ஈட்டித்தர வேண்டும் என்று, கலெக்டர் கூறினார்.
இக்கூட்டத்தில் டிஆர்ஓ துர்காமூர்த்தி, டிஆர்டிஏ திட்ட இயக்குநர் மலர்விழி, சமூக பாதுகாப்புத்திட்ட சப் கலெக்டர் ரமேஷ் உள்ளிட்டஅனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.