பாலப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
பாலப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அங்கன்வாடி மையத்தில் நாமக்கல் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
HIGHLIGHTS
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் அங்கன்வாடி பணியாளர்கள், குழந்தைகளுக்கு முன்பருவ கல்வியை வழங்குவதுடன், கர்ப்பிணித்தாய்மார்களுக்கு சத்தான உணவு வகைகள் குறித்த ஆலோசனைகளையும் வழங்கி குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகின்றனர். அங்கன்வாடிகளில் படிக்கும் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மாதா, மாதம் எடை மற்றும் உயரம் அளவிடுதல், ஊட்டச்சத்து நிலை குறித்து அங்கன்வாடி பணியாளர்கள் கணக்கெடுப்பு செய்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில், அங்கன்வாடி பணியாளர்களின் பணி சிறப்பாக நடைபெற்று வருவதை உறுதி செய்யும் வகையில், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் மோகனூர் தாலுக்கா, பாலப்பட்டி அங்கன்வாடி மையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். குழந்தைகளுக்கு விளையாட்டுடன் கூடிய கல்வி கற்க்கும் வகையிலான விளையாட்டு பொருட்களை பயன்படுத்தி கல்வி கற்பிக்கப்படுவதை பார்வையிட்டார். தொடர்ந்து, அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுடன் அமர்ந்து கலந்துரையாடினார்.
பாலப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், கர்ப்பிணி தாய்மார்களுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் குறித்து டாக்டர்கள் மற்றும் நர்சுகளிடம் கேட்டறிந்தார். அப்போது, கிராமப்புற நர்சுகள், தங்கள் பகுதிக்குட்பட்ட பெண்கள் கர்ப்பமடைந்தால், உடனடியாக அதனை அரசின் வெப்சைட்டில், பதிவு செய்வதோடு, கர்ப்பிணித்தாய்மார்களுக்கு தொடர் ஆலோசனைகளை வழங்க வேண்டுமென்று தெரிவித்தார். ஆய்வின் போது டாக்டர்கள், நர்சுகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.