கூட்டுறவு வங்கியில் போலி நகை அடகு வைத்து மோசடி: 3 அலுவலர்கள் சஸ்பெண்ட்
மல்லசமுத்திரம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில், போலி நகைகளை அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட, சங்க அலுவலர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஒன்றியம், பீமாரப்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (47). அவர், 2020ம் ஆண்டு ஜூலை மாதம் தனது உறவினரின் நகையை, மல்லசமுத்திரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் அடகு வைத்தார். 22 கிராம் மதிப்புள்ள இரண்டு வளையல்களுக்கு, கிராமிற்கு தலா ரூ. 3,000 வீதம், மொத்தம் ரூ.66,ஆயிரம் கடன் வழங்கப்பட்டது.
கடந்த, இரண்டு நாட்களுக்கு முன், பாலகிருஷ்ணனை அழைத்த கூட்டுறவு சங்க அலுவலர், தமிழக அரசின் சலுகை திட்டத்தின் கீழ் 5 பவுன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ், உங்கள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அடகு வைத்த நகையை திரும்பப் பெற்றுச் செல்லலாம் என, தெரிவித்தனர்.
கூட்டுறவு சங்கத்துக்கு சென்ற பாலகிருஷ்ணனிடம், சங்க அலுவலர், போலி நகையை அடகு வைத்துள்ளதால், உடனடியாக முழு பணத்தையும் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால், போலீசில் புகார் செய்யப்படும் என மிரட்டியதாக கூறப்படுகிறது. அதிர்ச்சி அடைந்த பாலகிருஷ்ணனுக்கும், வங்கி அலுவலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தகவல் அறிந்து வந்த பீமாரப்பட்டி பொதுமக்கள், கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டனர். இதற்கிடையே, பாலகிருஷ்ணன், ரூ.20 ஆயிரத்தை கூட்டுறவு சங்கத்தில் கட்டி உள்ளார். இச்சம்பவம் தொடர்பாக, நாமக்கல் கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகள், மல்லசமுத்திரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், ஆய்வு மேற்கொண்டனர். அதில், அங்கு பணியாற்றும் 3 பணியாளர்கள், நகைக்கடன் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.
அவர்கள் மீது, போலீசில் மோசடி வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், இச்சங்கத்தில் ரூ.14 லட்சம் வரை போலி நகைக்கடன் மோசடி நடத்திருக்கலாம் என கூறப்படுகிறது. நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் கூறுகையில், மல்லசமுத்திரம் கூட்டுறவு சங்க விவகாரம் குறித்து பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்களா என்பது குறித்து எனக்கு இதுவரை தகவல் வரவில்லை என்றார்.
திருச்செங்கோடு கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் வெங்கடாஜலம் கூறும்போது, போலி நகை மோசடி தொடர்பாக, வங்கி அலுவலர்கள் சிவலிங்கம், சுந்தரராஜன், சரோமணி ஆகிய 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, நாமக்கல் எஸ்.பியிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்க தலைவர் ராஜினாமா கடிதம் ஏதும் கொடுக்கவில்லை. விசாரணை முடியும் வரை அவர் ராஜினாமா செய்ய முடியாது என்றார்.