வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்த இந்திய மாணவர் சங்கம் முடிவு
வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்த இந்திய மாணவர் சங்கம் முடிவு செய்து அறிவித்து உள்ளது.
HIGHLIGHTS
ராசிபுரம் அரசு கலைக்கல்லூரியில், மாணவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், வரும் அக்.3 முதல் தொடர் வகுப்பு பறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் என மாணவர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்திய மாணவர் சங்கத்தின், ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி கிளைக் கூட்டம், கிளை ஒருங்கிணைப்பாளர் ராஜசூரியா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கல்லூரி நிர்வாகம் நிறைவேற்றாவிட்டால், வருகிற அக். 3ம் தேதி முதல் தொடர் வகுப்பு புறக்கணிப்பு செய்வதென்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட தலைவர் தங்கராஜ் மற்றும் செயற்குழு உறுப்பினர் முகமது நிசார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கூட்டம் முடிந்த பிறகு, தீர்மானங்களை கல்லூரி முதல்வர் பானுமதியிடம் மனுவாக அளித்தனர்.
அதில் கூறியுள்ளதாவது:-
கல்லூரியில் அனைத்து துறைகளிலும் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கேண்டீன் வசதி செய்து கொடுக்க வேண்டும். அனைத்து வகுப்பறைகளிலும், மின்விசிறி, மின் விளக்கு வசதி மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைத்து கொடுக்க வேண்டும். கல்லூரி வளாகத்தை முழுமையாக சுத்தம் செய்து, போதிய சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பொருளாதார துறையில் மின்சார ஒயர்கள் திருடப்பட்டது தொடர்பாக முறையான விசாரணை நடத்த வேண்டும்.
கல்லூரி டி பிளாக் கட்டிடம் முழுவதும் இடிந்து மாணவர்கள் மேலே விழும் அபாயம் உள்ளது. எனவே அங்கு படிக்கும் மாணவர்களை உடனடியாக மாற்று கட்டிடத்திற்கு மாற்ற வேண்டும். மாணவியர் விடுதியில் நாப்கின் எரியூட்டும் இயந்திரம் அமைத்துக்கொடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட தீர்மானங்கள் மனுவாக வழங்கப்பட்டுள்ளன.