தின்னர் திரவம் குடித்த 3 வயது குழந்தை பலி: தீவிர சிகிச்சையில் மற்றொரு குழந்தை
பள்ளிபாளையம் அருகே, தண்ணீர் என நினைத்து தின்னர் திரவத்தை இரண்டு குழந்தைகளும் குடித்துள்ளன
HIGHLIGHTS
பள்ளிபாளையம் அருகே, தண்ணீர் என நினைத்து தின்னரைக் குடித்த 3 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மற்றொரு குழந்தைக்கு ஈரோடு அரசு ஆஸ்பத்தரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே கல்லாங்காடு பகுதி சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு தேஜூ ஸ்ரீ (3), மவுலி ஸ்ரீ (5) என இரு பெண் குழந்தைகள் இருந்தனர். அவர் தனது வாகனத்திற்கு பெயிண்ட் அடிப்பதற்காக, பெயிண்ட்டுடன் கலக்கும் தின்னர் பாட்டில் வாங்கி வந்து வீட்டில் வைத்திருந்தார். நேற்று வீட்டில் இருந்த அவரது குழந்தைகள், தண்ணீர் என நினைத்து தின்னர் பாட்டிலைத் திறந்து இருவரும் தின்னரைக் குடித்துள்ளனர். சிறிது நேரத்தில் இரண்டு குழந்தைகளும் வாந்தி எடுத்து மயங்கியுள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், இரு குழந்தைகளையும் பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, குழந்தை தேஜூ (3) உயிரிழந்தார். மற்றொரு குழந்தை மவுலி ஸ்ரீக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக பள்ளிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.