தென்னை விவசாயிகளுக்கு மத்திய அரசின் சாகுபடி மானியம்: விண்ணப்பிக்க அழைப்பு
தென்னை பயிரிட்டுள்ள விவசாயிகள் மத்திய அரசின் சாகுபடி மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
HIGHLIGHTS
தென்னை பயிரிட்டுள்ள விவசாயிகள் மத்திய அரசின் சாகுபடி மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னை வளர்ச்சி வாரியத்தின், பரப்பு விரிவாக்கத்திட்டத்தின் கீழ், தென்னை சாகுபடி செய்யும் சிறு மற்றும் குறு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், பயிர் சாகுபடி மானியம் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் இளங்கன்று (ஒரு வருட கன்று) சாகுபடி செய்த விவசாயிகள் மட்டுமே பயனடைய முடியும். இத்திட்டத்திற்கான மானிய தொகை 1 ஹெக்டேருக்கு (175 தென்னங்கன்று) நெட்டை ரகத்திற்கு ரூ.6,500ம், கலப்பின ரகத்திற்கு ரூ.6,750ம் மற்றும் குட்டை ரகத்திற்கு ரூ.7,500-ம் இரண்டு தவணையாக பிரித்து விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும்.
எனவே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள், இதற்கான விண்ணப்ப படிவங்களை தென்னை வளர்ச்சி வாரிய வெப்சைட்டான www.coconutboard.gov.in-ல் இருந்து டவுன் லோடு செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மைய வேளாண் அலுவலர் மூலமாக, தென்னை வளர்ச்சி வாரிய மண்டல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் தென்னை நடவு வயலின் புகைப்படம், சிட்டா மற்றும் அடங்கல், ஏதேனும் ஒரு அடையாள அட்டை நகல், வங்கி புத்தகத்தின் முன்பக்க நகல் மற்றும் நிலவரிச்சான்று ஆகியவற்றை இணைத்து அனுப்பிட வேண்டும். விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.