நாமக்கல் மாவட்டத்தில் விதிகளை மீறிய 11 உரக்கடைகளுக்கு தடை
நாமக்கல் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 11 உரக்கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 11 உரக்கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டு, 50 டன் உரங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அசோகன் கூறுகையில், நாமக்கல் மாவட்டத்தில், கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவின்பேரில், உரங்கள் பதுக்கி வைத்தல், கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல், யூரியா விற்பனை செய்யும்போது கூடுதல் பொருட்களை வாங்க கட்டாயப்படுத்துதல், உரக்கடத்தல், கலப்பட உரம், வேளாண்மை அல்லாத பிற பயன்பாடுகளுக்கு உபயோகித்தல் ஆகிய சட்டத்திற்கு புறம்பான செயல்களை தடுத்திடும் வகையில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலை துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அலுவலர்களை உள்ளடக்கிய மாவட்ட அளவிலான சிறப்பு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த குழுவினர் 15 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 142 தனியார் உர விற்பனை நிலையங்கள், 143 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் உரக்கட்டுப்பாட்டு சட்டத்தின் விதிகளை மீறி செயல்பட்ட 11 உர விற்பனை நிலையங்களுக்கு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் ரூ.12 லட்சத்து 65 ஆயிரத்து 670 மதிப்பிலான 50.37 டன் உரங்கள் தற்காலிகமாக முடக்கம் செய்யப்பட்டு உள்ளது.
விவசாயிகளுக்கு மானிய விலை உரங்களுடன் மற்ற கூடுதல் பொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்தாலோ அல்லது அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தாலோ, சம்மந்தப்பட்ட கடைகளின் உர விற்பனை லைசென்ஸ் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.