மத்திய அரசின் ஜீவன் ரக்ஷா விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
மத்திய அரசின் ஜீவன் ரக்ஷா விருது பெற தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
HIGHLIGHTS
மத்திய அரசின் ஜீவன் ரக்ஷா விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துக்கள், சாலை விபத்துக்கள், தீ விபத்துக்கள், நிலச்சரிவு, விலங்கு தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டு, மனித உயிர்களை மீட்பவர்களுக்கு, மத்திய அரசின் ஜீவன் ரக்ஷா பதக்க விருதுகள் வழங்கப்படுகிறது.
சர்வோட்டம் ஜீவன் ரக்ஷா பதக்கம் மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை வீரத்துடன் போராடி மீட்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. உத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை போராடி மீட்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஜீவன் ரக்ஷா பதக் தனக்கு காயம் ஏற்பட்டாலும் வீரத்துடன் தாமதமின்றி போராடி உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு வழங்கப்படுகிறது.
2022-ஆம் ஆண்டிற்கான ஜீவன் ரக்ஷா பதக்க விருதிற்கு, தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களை நாமக்கல் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அலுவலகத்தில் பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஆக.3ம் தேதி மாலை 4 மணிக்குள் 3 நகல்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.