நாமகிரிப்பேட்டையில் 27ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
நாமகிரிப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம் வரும் 27ம் தேதி நாமகிரிப்பேட்டையில் நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம் ராசிபுரம் தாலுகா, நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்து, அண்ணா வெள்ளி வார சந்தை சமுதாய நலக்கூடத்தில், வருகின்ற 27ம் தேதி காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், யுடிஐடி பதிவு மேற்கொள்ளுதல், ஆதார் அட்டை பதிவு மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தில் பதிவு ஆகியவை மேற்கொள்ளப்படும்.உதவிகளைப் பெறுவதற்கு ஒவ்வொரு பதிவிற்கும் தனித்தனியாக பாஸ்போர்ட் அளவு போட்டோ - 4, ரேஷன் கார்டு நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் முகாமில் கலந்துக்கொண்டு பயனடையலாம்.
ஏற்கனவே, மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற்றவர்களுக்கு உதவி உபகரணங்கள் மற்றும் மாத உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, பணிக்கு செல்பவர் மற்றும் கல்வி பயில்பவர்களுக்கு இலவச பஸ் பாஸ், வங்கிக்கடன் மற்றும் பிற அரசு உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பங்களும், ஆலோசனைகளும் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் இச்சிறப்பு ஒருங்கிணைந்த மருத்துவ முகாமில் கலந்துக்கொண்டு பயனடையுமாறு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.