நாமக்கல் மாவட்டத்தில் 80 சதவீத அரசு பேருந்துகள் இயங்கின
அகில இந்திய பொது வேலை நிறுத்தப் போராட்டம் நாமக்கல் மாவட்டத்தில் 80 சதவீத அரசு பேருந்துகள் இயங்கின
HIGHLIGHTS
பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் விலைவாசியை குறைக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துககளை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய தொழிற்சங்கங்க கூட்டமைப்பு சார்பில் மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 28ம் தேதி முதல் நாள் போராட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் அரசு பஸ்கள் முழுமையாக ஓடவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், இன்று இண்டாவது நாள் போராட்டத்தில் நாமக்கல், மாவட்டத்தில், நாமக்கல், ராசிபுரம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு உள்ளிட்ட இடங்களில் 80 சதவீதத்திற்கு மேற்பட்ட அரசு பேருந்துகள் ஓடின. தொமுச, அண்ணா தொழிற்சங்கம், கம்யூனிஸ்ட் தொழிற்சங்கம் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்களும், பல இடங்களில் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டனர். பெரும்பாலான அரசுத்துறை வங்கிகள் இயங்கவில்லை. ஒருசில வங்கிகள் குறைந்த பணியாளர்களுடன் இயங்கின. தனியார்த்துறை மற்றும் கார்ப்பரேட் வங்கிகள் வழக்கம்போல் இயங்கியது.