நாமக்கல் அரசு மருத்துவமனையில் 30 டாக்டர் உள்பட 77 பேர் நியமனம்
நாமக்கல் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, புதியதாக 30 டாக்டர்கள், 22 நர்ஸ்கள் உள்ளிட்ட 77 பேர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் உள்ள உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில், ஆயிரக்கணக்கானவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் இல்லை. இதனால் அரசு அனுமதியின் பேரில் தற்காலிக டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம் செய்ய, நேற்று நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் மற்றும் குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிகளில், நேர்காணல் நடைபெற்றது.
இதில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நேர்காணலின் முடிவில், கொரோனா தொற்று தடுப்பு சிகிச்சை பணிகளுக்காக 30 டாக்டர்கள், 22 நர்சுகள் 25 பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் உடனே பணியில் சேர்வார்கள் என்று அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி தெரிவித்துள்ளார்.