தமிழகத்தில் 40 ஆண்டு கூட்டணியால் காங்கிரசுக்கு சறுக்கல்: கே.எஸ். அழகிரி பேச்சு
தமிழகத்தில் 40 ஆண்டுகளாக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்ததால் காங்கிரஸ் கட்சிக்கு சறுக்கல் ஏற்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வங்கதேச சுதந்திரமும், இந்திராகாந்தியின் பங்கும் பற்றிய கருத்தரங்கம் நாமக்கல்லில் நடைபெற்றது.
இதில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே. எஸ். அழகிரி பங்கேற்றுப் பேசியதாவது:
கொள்கை சார்ந்த அரசியலில் காங்கிரஸ் கட்சி ஓரளவிற்கு தான் வெற்றி பெற்றுள்ளது. உலகில் சிரமம் இல்லாத விஷயம் எதுவும் இல்லை. கூட்டணி பேச்சுவார்த்தையின்போது, வாதத்திறமை மட்டு போதாது. பொறுமையும் அவசியமாகும். தமிழகத்தில் 50 ஆண்டுகாலம் காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததால் நமது கட்சி வளர்ச்சியில் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நமக்கு ஒரு அடிப்படை உள்ளது. நமக்கு இணையான கட்சி எதுவும் இல்லை. மகாத்மா காந்தியின் அகிம்சை தத்துவம் தான் காங்கிரஸ் கட்சியை உயிர்ப்புடன் வைத்துள்ளது. டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டம் இந்தியாவிற்கு மட்டுமில்லை உலகிற்கே ஒரு எடுத்துக்காட்டாகும். கடந்த 40 ஆண்டுகளில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்ததால் தமிழகத்தில் நாம் சற்று சறுக்கியுள்ளோம்.
கடந்த லோக்சபா தேர்தலில் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்ததால் தான் நாம் வெற்றி பெற்றோம். நமக்கு தெரியாதது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தெரிந்துள்ளது. அதனால் ஸ்டாலினை முதல்வர் வேட்பாளர் என அறிவித்ததில் நமக்கு எந்த தயக்கமும் இல்லை. கொஞ்ச நாள் அவர் முதல்வராக இருந்துவிட்டு போகட்டும். அதற்குள் நாம் பலமடைவோம். அதன்பின் நாம் முதல்வர் பதவியை அடைவோம் என்றார்.
கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.