தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்கள் 3 நாள் மறியல் போராட்டம் அறிவிப்பு
தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்கள் 3 நாள் மறியல் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர்.
HIGHLIGHTS
பால் கொள்முதல் விலையை அதிகரிக்க கோரி தமிழகம் முழுவதும் வரும் 18ம் தேதி முதல் 3 நாட்கள் கறவை மாடுகளுடன் மறியல் போராட்டம் நடைபெறும் என பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் நிர்வாகக் குழு கூட்டம் நாமக்கல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை வகித்த தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முகமது அலி, கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில், நீண்ட நாட்களாக பால் கொள்முதல் விலையை அதிகரிக்க கோரி, அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை கொள்முதல் விலையை உயர்த்தவில்லை, இதுகுறித்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்களிடம் கேட்டால், கொள்முதல் விலை தொடர்பான கோப்புகள் முதல்வரின் மேஜையில் உள்ளதாகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி கொண்டு, தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறார். எனவே, பசும்பால் லிட்டருக்கு ரூ. 10 விலை உயர்த்தி 42 ஆகவும், எருமைப் பால் லிட்டருக்கு ரூ. 10 விலை ரூபாய் உயர்த்தி ரூ. 51 ஆகவும் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்றும், மற்றும் பல கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் வருகின்ற 18,19, 20 ஆகிய தேதிகளில், சட்டசபைக் கூட்டம் நடைபெறும் நாட்களில் ஆவின் கூட்டுறவு ஒன்றியங்கள் மற்றும் ஆரம்ப பால் உற்பத்தியாளர் சங்கங்களின் முன்பு கறவை மாடுகளுடன் மறியல் போராட்டமும், ஆர்ப்பாட்டமும் நடைபெறும். அதற்கும் அரசு செவி சாய்க்கவில்லை என்றால், தலைமை செயலகம் முன்பு ஆர்ப்பாட்டத்திலும், தமிழக முழுவதும் பால் நிறுத்த போராட்டத்திலும் ஈடுபடுவோம்.
பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகை என்ற பெயரில் மோசடி நடந்துள்ளது. ஓராண்டிற்கு பிறகு ஊக்கத் தொகை என்ற பெயரில் குறிப்பிட்ட தொகையை தமிழக அரசு வழங்கியுள்ளது. ஆனால் அவற்றிலும் 70 சதவீதம் தொகையை பிடித்தம் செய்து அதனை வங்கிகளில் ஃபிக்சட் டெபாசிட்டாக வரவு வைக்கப்படுகிறது. எனவே இதனை ரத்து செய்து ஊக்கத்தொகை முழுமையாக பணமாக வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஆட்சிக்கு வந்தபோது, ரூ. 3 பாலின் விலையை குறைப்பதாக கூறி அதில் பல்வேறு தர்ம சங்கடத்தில் மாட்டிக் கொண்டுள்ளது. இதனால் ஆவின் நிறுவனத்திற்கு ஆண்டிற்கு ரூ. 270 கோடி நஷ்டமாகிக் கொண்டிருக்கிறது. இந்த ரூ. 270 கோடியை தமிழ்நாடு அரசு ஆவின் நிறுவனத்திற்கு மானியமாக வழங்க வேண்டும். அதை வழங்காவிட்டால் ஆவின் நிறுவனத்திற்கு மிகுந்த நஷ்டம் ஏற்பட்டு அதை நடத்துவதில் சிரமம் ஏற்படும். இதனால் தற்போது, பால் உற்பத்தியாளர்களுக்கும், ஆரம்ப பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கும் பணம் கொடுக்க முடியாத நிலை ஆவின் நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ளது. எனவே பால் உற்பத்தியாளர்களுக்கு உள்ள நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.