நாமக்கல்லில் ரூ.7.79 லட்சம் பறிமுதல்
நாமக்கல், இராசிபுரம் ஆகிய பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட 7.79 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
சட்டமன்ற தேர்தலையொட்டி பணம் மற்றும் பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏ.கே.சமுத்திரம் ஆவுடையார் கோவில் அருகே உதவி தோட்டக்கலை துறை அலுவலர் ராஜவேல் தலைமையிலான கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அவ்வழியாக வந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த சிலம்பரசன் என்பவரின் காரை சோதனை செய்த போது உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற 1 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், பணத்தை நாமக்கல் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான கோட்டை குமாரிடம் ஒப்படைத்தனர்.
இதே போல் இராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில், இராசிபுரம் உள்ளிட்ட இடங்களில் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்பு குழுவினர் மேற்கொண்ட வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி பணம் எடுத்து சென்ற ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த முட்டை வியாபாரி பாரதியிடம் ரூ. 5 இலட்சமும், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்த முட்டை வியாபாரி ராஜேஷிடம் 65 ஆயிரம் ரூபாயும், பச்சுடையாம்பட்டியை சேர்ந்த கோழி வியாபாரி பிரபுவிடமிருந்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் சக்திவேலிடம் ஒப்படைத்தனர். பணத்தை பெற்று கொண்ட தேர்தல் அலுவலர்கள் அதனை மாவட்ட கருவூலத்தில் செலுத்தினார்கள். இந்த பணத்தை உரிய ஆவணங்களை வழங்கி பெற்று கொள்ளலாம் என தெரிவித்தார்.