குமாரபாளையம் அருகே கோவில் நிலம் ஏலம்: புறக்கணித்த விவசாயிகள்
குமாரபாளையம் அருகே நடைபெற்ற கோவில் நிலம் ஏலத்தை விவசாயிகள் புறக்கணித்தனர்.
HIGHLIGHTS
குமாரபாளையம் லட்சுமிநாராயண சுவாமி கோவிலில், அந்த கோவிலுக்கு சொந்தமான குள்ளநாயக்கன்பாளையம் பகுதி விவசாய நிலம் ஏலம் நடைபெற்றது. ஆய்வர் வடிவுக்கரசி, தக்கார் நவீன்ராஜ் தலைமை வகித்தனர். இதில் ஏலத்தில் பங்கேற்ற விவசாயிகள் ஏலத்தை புறக்கணித்து மனு கொடுத்தனர்.
இது குறித்து விவசாயியும், கோட்டைமேடு பகுதி ஒன்றிய தி.மு.க.கவுன்சிலருமான தனசேகரன் கூறுகையில், மூன்று வருடத்திற்கு ஒருமுறை ஏலம் நடந்து வந்தது. கடந்த ஆண்டு ஒரு வருடம் என மாற்றினார்கள். இதில் விவசாயம் செய்ய கால நேரம் போதுமானதாக இல்லை. வாய்க்காலில் தண்ணீர் வந்தால்தால் விவசாயம் செய்ய முடியும்.
தற்போது பொட்டாஷ் உள்பட உரங்களின் விலை அதிகமானது. இடு பொருட்கள் செலவு அதிகம் ஆகி வருகிறது. ஒரு வருடம் வாய்க்காலில் தண்ணீர் வராவிட்டால் செலுத்திய பணம் முழுதும் நஷ்டம் ஏற்படும். விவசாயம் செய்தாலே நஷ்டம் ஏற்படும் நிலையில், இந்த ஆண்டு ஏலத்தில், கடந்த ஆண்டு ஏலத்தொகையை விட 10 சதவீதம் அதிகப்படுத்தி கேட்டனர். ஒரு வருடம்தான் ஏலம் என்றும் அதிகாரிகள் கூறினார்கள். இதில் எங்களுக்கு உடன்பாடில்லை.
ஆகவே, 10 சதவீத ஏலத்தொகை உயர்வை தள்ளுபடி செய்ய வேண்டும். ஒரு வருடம் என்பதை மூன்று அல்லது ஐந்து வருடமாக உயர்த்த வேண்டும் என அதிகாரிகளிடம் மனு கொடுத்து, ஏலத்தை புறக்கணித்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
செயல் அலுவலர் சின்னசாமி, அலுவலக நிர்வாகி வெங்கடேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.