குமாரபாளையத்தில் ஜனவரி 23-ல் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடிவு
குமாரபாளையத்தில் ஜன.23ல் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது என ஜல்லிக்கட்டு பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
HIGHLIGHTS
குமாரபாளையத்தில் ஜன.23ல் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது என ஜல்லிக்கட்டு பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம் தலைவர் வினோத்குமார் தலைமையில் நடைபெற்றது. நவ. 23ல் உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடை வழக்கு வரும் நிலையில், மக்கள் மத்தியில் அதற்கான விழிப்புணர்வு எற்படுத்தும் வகையில் நவ. 18ல் மதுரையில் நடைபெறும் பேரணியில் திரளாக பங்கேற்பது, 2023, ஜன. 23ல் குமாரபாளையத்தில் 7ம் ஆண்டாக குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள் சுகுமார், ராஜ்குமார், விடியல் பிரகாஷ், மோகன், ரவி, கதிரவன் உள்பட பலர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழரின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் ஒன்று. மன்னர்கள் காலத்தில் இருந்து இது நடைமுறையில் இருந்து வந்துள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்றில் கூட, கட்டபொம்மனின் தம்பி வெள்ளைய தேவன், வெள்ளையம்மாளை காளையை அடக்கித்தான் திருமணம் செய்து கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தாய்க்கு பின் தாரம் படத்தில் கூட ஜல்லிக்கட்டு பெருமையை பொதுமக்கள் அறிந்திடும் வகையில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். காளையை அடக்கும் காட்சியில் நடித்திருப்பார். இந்த ஜல்லிகட்டு போட்டிகள் மதுரை, தேனி, அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதியில்தான் நடந்து வந்தன. மற்ற பகுதி மக்கள் சினிமா, மற்றும் டி.வி. செய்தியில் மட்டும்தான் பார்த்து கொண்டிருந்தனர். தற்போது தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டி குமாரபாளையம் நகரில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன், ஜே.கே.கே. நடராஜா கல்வி நிறுவன நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா மற்றும் வினோத் முயற்சியில் நடந்தது. இதற்கு பொதுமக்கள் பேராதரவு கொடுத்தனர். பல ஊர்களில் இருந்து வந்து ஜல்லிக்கட்டு போட்டியை பிரமிப்புடன் பார்த்தனர். இதன் பின் நாமக்கல், பள்ளிபாளையம், திருச்செங்கோடு, உள்ளிட்ட பல பகுதியில் நடைபெற துவங்கின. ஜல்லிகட்டு காளைகள் யாவும் மதுரை பகுதியில் இருந்துதான் கொண்டு வரப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. தற்போது குமாரபாளையம் மற்றும் சுற்றியுள்ள பல ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகள் வளர்க்கப்படுகின்றன.
இந்த போட்டிக்கு தேவையான இடம், பாதுகாப்பு பணிகள் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பலமுறை நேரில் வந்து ஆய்வு செய்து அனுமதி வழங்கப்படுகிறது. ஆட்சியாளர்களும் இதற்கு ஆதரவு கொடுத்து வந்தனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் மைதானத்தில் சென்னையில் நடைபெறும் புகழ்மிக்க கலை நிகழ்ச்சிகள் குமாரபாளையத்தில் நடைபெற துவங்கியது. திரைப்பட கலைஞர்கள் நேரில் வந்து ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தனர்.
இந்த போட்டி நடைபெறும் போது, கால்நடைத்துறை சான்று, மருத்துவத்துறை சான்று, ஆகிய காளைகளுக்கு வழங்க, போட்டி நடத்தப்படும் இடத்தில் முகாம் அமைத்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வந்தன. மேலும் தீயணைப்பு படையினர், ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும். கார்கள், டூவீலர்கள் நிறுத்த தனி இடங்கள் அமைக்கப்படும். இத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகளை தாண்டி பல காளைகள் தடுப்பு வேலிகளை தாண்டி, கிராமப்புற பகுதியில் நுழைந்து விடுவதுண்டு. அதனை தேடி கண்டிபிடிக்க இரண்டு, மூன்று நாட்கள் கூட ஆகியுள்ளன.
போட்டிகளில் பங்கேற்க 300க்கும் மேற்பட்ட வீரர்கள் மதுரை, தேனி உள்ளிட்ட பகுதியில் இருந்து வரவழைக்கப்படுவார்கள். காளையை பிடிக்கும் வீரர்களுக்கு தங்கம், வெள்ளி, கார், பைக், கட்டில், மெத்தை, டிரெஸ்ஸிங் டேபிள், மிக்சி, சைக்கிள், உள்ளிட்ட பல உபயோகமான பொருட்கள் பரிசாக வழங்கப்படும்.
இதில் பாதுகாப்பு பணிக்காக 500க்கும் மேற்பட்ட போலீசார், காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்பார்கள். ஜவுளி உற்பத்திக்கு பெயர் எடுத்த குமாரபாளையம் தற்போது ஜல்லிக்கட்டு போட்டிக்கும் பெயர் பெற்று வருகிறது. தற்போது ஏழாவது ஆண்டாக ஜனவரி 23ல், குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இதனை ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்து உள்ளனர்.