நாகையில் சுய உதவி குழு நுண் கடன் நிறுவனங்கள் வசூல் வேட்டை
நாகையில் சுய உதவி குழு நுண் கடன் நிறுவனங்கள் வசூல் வேட்டையில் ஈடுபட்டு அதிரடி காட்டுகிறது. இந்த சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் வீடியோ, ஆடியோக்கள்.வெளிவந்தன.
HIGHLIGHTS
கொரோனா இரண்டாம் அலை வேகம் எடுத்துள்ள நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் வங்கிகள், சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கியுள்ள நுண் கடன் நிறுவனங்கள் வசூல் வேட்டையில் ஈடுபட கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால் தமிழக அரசின் உத்தரவை காற்றில் பறக்கவிட்டு நாகையில் ஊரடங்கு காலத்திலும் வசூல் வேட்டையில் ஈடுபடுகின்றனர் நுண் கடன் நிறுவனங்கள். நாகை தியாகராஜபுரம் பகுதிக்கு இன்று காலை வந்த கிராம விடியல் நிறுவன ஊழியர் அப்பகுதி மக்களை பணம் கட்ட சொல்லி நிர்பந்தம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வெளியாகி உள்ளது.
கொரோனா விதிகளை மீறி முக கவசம் அணியாமல் அப்பகுதி மக்களை ஒன்று கூட்டி குழு கூட்டம் நடத்தும் அந்த நிறுவன ஊழியரின் செயலை அப்பகுதியை சேர்ந்தவர்கள் படம் பிடித்து வெளியிட்டுள்ளனர்.
இதேபோல நாகை அடுத்துள்ள வெங்கிடாங்கால் பகுதியை சேர்ந்த தமிழ் என்பவரிடம் L & D சுய உதவிக்குழு நிறுவன ஊழியர் பேசும் ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருமருகல் ஒன்றியம் அம்பல் ஊராட்சி காமராஜர் தெருவில் எக்விடாஸ் நுண் கடன் நிறுவன ஊழியர்கள் இன்று காலை வசூல் வேட்டையில் ஈடுபட்டதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாழ்வாதாரம் இழந்து வீட்டில் உள்ள கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.