மனைவி முன்பு கணவரை குத்திக் கொலை செய்த அரசு ஊழியர்
மதுரை காமராஜபுரம் பகுதியில் அலுமினிய பட்டறை தொழிலாளி மனைவி முன்பு குத்திக்கொலைசெய்த அரசு மருத்துவமனை ஊழியர்
HIGHLIGHTS
மதுரை காமராஜர்புரத்தில் மனைவி முன்பு அலுமினிய பட்டறை தொழிலாளி ராஜேஷ்குமாரை 40, குத்தி கொலை செய்த அரசு மருத்துவமனை தற்காலிக ஊழியர் மருதுசூர்யாவை கீரைத்துரை போலீசார் தேடி வருகின்றனர்.
காமராஜர்புரம் திரு.வி.க., தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார்.இவரது மனைவி சத்யா. இரு மகன்கள் உள்ளனர்.அரசு மருத்துவமனை தற்காலிக ஊழியர் வண்டியூர் மருதுசூர்யா ஏற்பாட்டில், அதே மருத்துவமனையில் சத்யாவுக்கு தற்காலிக ஊழியராக பணிவாய்ப்பு கிடைத்தது. சமீபகாலமாக மருதுசூர்யாவின் நடத்தை சரியில்லாததால் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நேற்றுமுன்தினம் இரவு அலைபேசியில் மருதுசூர்யாவை, ராஜேஷ்குமார் எச்சரித்தார்.
ஆத்திரமுற்ற மருதுசூர்யா நள்ளிரவு 1:30 மணியளவில் ராஜேஷ்குமார் வீட்டிற்கு வந்து மிரட்டினார். வாக்குவாதம் ஏற்பட கத்தியால் ராஜேஷ்குமாரை குத்திவிட்டு தலைமறைவானார். அரசு மருத்துவமனையில் நேற்று காலை 8:30 மணிக்கு சிகிச்சை பலனின்றி ராஜேஷ்குமார் உயிரிழந்தார். இந்நிலையில் கொலை செய்த அரசு மருத்துவமனை ஊழியரை கீரைத்துறை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.