தாக்குதலுக்கு கண்டனம்: மதுரை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மறியல்
தூய்மைப்பணியாளரை தாக்கியவரை கைது செய்யக்கோரி, மதுரை மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
மதுரை மாநகராட்சி 94 -வது வார்டு தூய்மைப்பணியாளர் மணி முருகேசன் (வயது 41) என்பவரை, நேற்று பணியின் போது மூன்று மர்ம நபர்கள், இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், தலையில் காயமடைந்து மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, உடன் பணிபுரிந்த தூய்மைப் பணியாளர்கள் அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். எனினும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால், மதுரை மாநகராட்சி 100 - வது வார்டு பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், அவனியாபுரம் மாநகராட்சி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்டோர், மதுரை விமான நிலையத்திற்கு செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, போராட்டக்காரர்கள் அவனியாபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். காவல் துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், தூய்மைப் பணியாளரை தாக்கிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து, தூய்மைப்பணியாளர்கள் கலைந்து சென்றனர்.