மதுரை கலெக்டருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு
பட்டா விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவு மீறப்படாததால் கலெக்டருக்கு எதிரான அவமதிப்பு வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது
HIGHLIGHTS
பட்டா வழங்கிய விவகாரம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவு எதுவும் மீறப்படாததால் மதுரை கலெக்டருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முடித்து வைத்தது.
மதுரை ஒத்தக்கடை முத்துக்கிருஷ்ணன் தாக்கல் செய்த மனு:காளிகப்பானில் ஊராட்சி ஒன்றிய சாலை என வகைப்படுத்திய இடத்தில் 38 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுத்தது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம்தான் வழங்க வேண்டும்.
சாலை என வகைப்படுத்திய இடத்திற்கு பட்டா வழங்கக்கூடாது என உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்செய்தேன். இதில் தற்போதைய நிலை தொடர நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.இதை மீறி இடத்தை வகை மாற்றம் செய்து, ஆக்கிரமிப்பாளர்களை வரன்முறைப்படுத்த பட்டா வழங்க மதுரை கலெக்டர் உத்தரவிட்டார்.இதில் கலெக்டருக்கு அதிகாரம் இல்லை. அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது.கலெக்டர் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், கே.முரளிசங்கர் அமர்வு தற்போதைய நிலை தொடர வேண்டும் என இந்நீதிமன்றம் உத்தரவிடுவதற்கு முன்பே நிலம் மறுவகைப்படுத்தப்பட்டு, பட்டாக்கள் வழங்கப்பட்டது. அது நீதிமன்ற உத்தரவை மீறுவதாக இருக்காது என கலெக்டர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இதில் நீதிமன்ற உத்தரவு மீறப்படவில்லை என்பது தெரியவருகிறது.ரிட் மனு முடிவுக்கு வரும்வரை, பட்டா வழங்கப்பட்ட நபர்கள் நிலத்தில் கட்டுமானம் செய்யாமல் அல்லது நிலத்தில் எந்த மாற்றமும் மேற்கொள்ளாமல் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். பட்டாக்கள் ரிட் மனுவின் இறுதி முடிவிற்கு உட்பட்டதாக இருக்கும். அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனர்.