50 சதவீத மானிய விலையில் துவரை விதைகள், நுண்ணூட்ட உரக்கலவை
50 சதவீத மானிய விலையில் துவரை விதைகள், நுண்ணூட்ட உரக்கலவை வழங்கப்படுகிறது
HIGHLIGHTS
இது குறித்து ஓசூர் வேளாண்மை உதவி இயக்குநர் மனோகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டாரத்தில் கோடை மழை பெய்துள்ளது. ஓசூர் வட்டாரத்தில் துவரை மானாவாரி விதைப்பு சுமார் 1500 எக்டேரில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நேரடி விதைப்பின் மூலம் குறைந்த மகசூல் கிடைத்து வந்தது. இதனை கருத்தில் கொண்டு "நாற்று விட்டு நடவு" செய்யும் புதிய முறை மாநிலத்திலேயே முதன் முறையாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டாரத்தில் ஆரம்பித்து மற்ற மாவட்டங்களுக்கும் பரவலாக்கப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான விதைகள் அனைத்தும் வேளாண்மை விரிவாக்க மையங்களில் BRG1, BRG5, CO8 ஆகிய ரகங்கள் 50 சதவீதம் மானிய விலையில் விவசாயிகள் பெறுவதற்காக ஓசூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் துவரைப் பயிர் நன்கு நோய் மற்றும் பூச்சி தாக்குதல் இல்லாமல் வளர உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா, டிரைக்கோ டெர்மா விரிடி மற்றும் பயிர் வளர்ச்சிக்குத் தேவையான நுண்ணூட்ட உரக்கலவை 50 சதவீதம் மானிய விலையில் தற்போது ஓசூர் வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, ஓசூர் வட்டார விவசாயிகள் அனைவரும் தங்களுக்கு தேவையான விதை மற்றும் உயிர் உரங்களை வாங்கி பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் வேளாண்மை உதவி இயக்குநர் மனோகரன் தெரிவித்துள்ளார்.