கேஆர்பி அணையில் இருந்து இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு
கேஆர்பி அணையில் இருந்து இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது; 16 ஊராட்சியில் உள்ள 9012 ஏக்கர் பாசன வசதி பெறும்.
HIGHLIGHTS
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கிருஷ்ணகிரி அருகே கேஆர்பி அணை கட்டப்பட்டுள்ளது. 52 அடி உயரம் கொண்ட இந்த அணையில் இருந்து, ஆண்டுதோறும் இரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் 9012 ஏக்கர் பாசனம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக கிருஷ்ணகிரி கேஆர்பி அணை நீர்வரத்து அதிகரித்து, அதன் முழு கொள்ளளவான 52 அடியில் இருந்து தற்போது 51.70 கன அடி அளவிற்கு நீர் மட்டம் உள்ளது. இதனையடுத்து கேஆர்பி அணையில் இருந்து இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என தென்பெண்ணை ஆற்றின் பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். விவசாயிகளின் கோரிக்கை அடுத்து தண்ணீர் திறக்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டார்.
அதன்படி இன்று கேஆர்பி அணையில் இருந்து இரண்டாம் போக சாகுபடிக்கு , மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி தண்ணீரை திறந்துவிட்டு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இன்று முதல், 120 நாட்களுக்கு வலது மற்றும் இடது புற கால்வாய் மூலமாக 180 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பெரிய முத்தூர் சுண்டேகுப்பம், திம்மாபுரம், செளட்ட அள்ளி, தளி அள்ளி, குண்டலபட்டி, காவேரிப்பட்டினம், பையூர் ஆகிய 16 ஊராட்சிகளில் உள்ள 9012 ஏக்கர் பாசனம் பெறும். விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.