கால்நடைகளுக்கு அரசு மானியத்துடன் காப்பீடு: விவசாயிகளுக்கு கிருஷ்ணகிரி கலெக்டர் அழைப்பு
கால்நடைகளை அரசு மானியத்துடன் காப்பீடு செய்து கொள்ள, விவசாயிகளுக்கு கிருஷ்ணகிரி ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
HIGHLIGHTS
இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேளாண் விவசாயிகளின் கால்நடைகளை பாதுகாத்திடும் வகையில், தமிழக அரசு தேசிய கால்நடை காப்பீடு திட்டத்தின் கீழ், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 4,700 கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
காப்பீடு செய்யும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு அரசு மானியமாக காப்பீடு சந்தா தொகையில் 70 சதவீத மானியமும், பொதுப்பிரிவினருக்கு 50 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. காப்பீடு செய்யப்படும் கால்நடைகளுக்கு காதுவில்லைகள் பொறுத்தப்படும். அவை இறக்க நேரிட்டால் கால்நடை உதவி மருத்துவரால் பரிசோதனை செய்து, அதற்கான சான்றிதழ் மற்றும் உரிய ஆவணங்களுடன் காப்பீட்டு நிறுவனத்தில் சமர்ப்பித்து, காப்பீட்டு தொகையை பெற்றுக்கொள்ளலாம்.
எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விருப்பம் உள்ள, கால்நடைகளை வளர்க்கும் விவசாயியகள், தங்களுடைய கால்நடைகளை அரசு மானியத்துடன் கூடிய காப்பீடு செய்த, அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்தின் உதவி மருத்துவரை அணுகி பயன் பெறுமாறு கேட்டுக்கொள்வதாக, கலெக்டர் தெரிவித்துள்ளார்.