கிருஷ்ணகிரி அடுத்த கரடிகுறியில் எருது விடும் விழா: 400 காளைகள் பங்கேற்பு
கிருஷ்ணகிரி அடுத்த கரடிகுறியில் நடைபெற்ற எருதுவிடும் விழாவில் 400க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
HIGHLIGHTS
கிருஷ்ணகிரி மாவட்டம், பூசாரிப்பட்டி பஞ்சாத்துக்குட்பட்ட கரடிகுறியில் இன்று எருதுவிடும் விழா நடைபெற்றது. மாவட்ட நிர்வாகம் விதித்த பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற விழாவில் கிருஷ்ணகிரி, வரட்டனபள்ளி, ஓரப்பம், சூளகிரி, பூசாரிபட்டி, ராயக்கோட்டை உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன.
காளைகளை அழைத்து செல்வோர் கொரானா தடுப்பூசி சான்றிதழ்கள் வைத்துள்ளனரா, எந்த பகுதியை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களை ஆர்.டி.ஓ., சதீஷ்குமார் நேரில் ஆய்வு செய்தார்.
இந்த எருது விடும் விழாவில் இரு புறமும் அமைக்கப்பட்ட தடுப்புகளுக்கு மத்தியில் காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் குறிப்பிட்ட எல்லையை குறைந்த வினாடியில் வேகமாக கடந்து சென்ற காளைகளுக்கு பரிசு தொகைகள் வழங்கப்பட்டது.
எருது விடும் விழாவை காண சுற்றுப்புற கிராமங்களிலிருந்து பெண்கள், சிறுவர்கள் உட்பட 2,000த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.