கரூரில் ஊரடங்கு விதிமீறல்: 20 கடைகளுக்கு தலா 5 ஆயிரம் அபராதம்
கரூரில், ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட 20-க்கும் மேற்பட்ட நகை மற்றும் துணிக்கடைகளுக்கு, தலா 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
HIGHLIGHTS
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, ஊரடங்கு அமலில் உள்ளது. குறிப்பாக, அதிக பாதிப்புள்ள கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில், ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. பிற மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பல்வேறு கடைகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில், கரூர் ஜவஹர் பஜார் கடைவீதியில், கொரோனா விதிமுறைகளை மீறி கடைகள் திறந்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்ரமணியம் தலைமையில், நகராட்சி அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
அப்போது, விதிமுறைகள மீறி திறக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள நகைக்கடைகள், துணிக்கடைகள் மற்றும் பாத்திரக்கடைகளை ஆய்வு செய்து, தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். அபராதம் விதித்ததுடன் முன்பக்க கதவுகளை அடைத்து, மறைமுகமாக பொதுமக்களை அனுமதித்து நகை கடையில் வியாபாரம் செய்து வந்ததும் தெரிய வந்தது. அதன் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.